எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு பரந்துபட்ட கூட்டணி ஒன்றை உருவாக்கி தனது வேலைத்திட்டத்துடன் பொது மக்களிடம் செல்லவுள்ளதாக சம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று அவசியம் எனவும், அதற்காக எதிர்காலத்தில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளேன். ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு நபர்கள் வேட்பாளர்களாக களமிறங்குவதாக கூறப்பட்டாலும் தரமான அரசியல் குழுவை அமைத்து எதிர்கால மாற்றங்களுக்கு உட்பட்ட வேலைத்திட்டத்தை மக்களிடம் முன்வைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளரை முன்வைப்போம்.
பொதுத் தேர்தல் என்றால் அதற்கு ஏற்ற அணி தேர்வு செய்யப்பட்டு முன்னிறுத்தப்படும். அதற்கு பதிலாக “நான்தான் ஜனாதிபதி வேட்பாளர், இதுவே எனது கொள்கை, எங்களுடன் சேருங்கள்” என்று நாம் யாருக்கும் அழைப்பு விடுக்க மாட்டோம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான வேலைத்திட்டம் குறித்து
கலந்துரையாடப்பட்டு, தகுதியான வேட்பாளர் ஒருவரையே நாங்கள் முன்னிறுத்துவோம்” என்றும் அவர் கூறினார்.