பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐ.நா மனித உரிமை சாசனங்களுக்கமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களுக்கோ சாசனங்களுக்கோ அமைய இயற்றப்படவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விடயம் என்று தான் நாம் கூற வேண்டும். இந்தச் சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது.

பல உரிமைகளில் தாக்கத்ததை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும் போது மக்களின் அபிப்பிராயங்கள், சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துதான் சட்டத்தை இயற்ற வேண்டும். ஆகவே இந்தச் சட்டத்திற்கு தற்போது அதற்கான நிலை எழுந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திற்கு மக்கள், நிபுணர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறப்படாமல், இதனை உருவாக்க கடமைகள் உள்ளன.

ஏனெனில் இலங்கை பல்வேறு ஐ. நா சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கிறது.

இந்த சாசனங்களில் உள்ள உரிமைகளை இலங்கையில் நடை முறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமாகும். இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை.

ஆகவே, அரசாங்கம் இதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வராமல், தற்போது இதை நிறுத்தி இவ்வாறான சட்டம் இயற்றுவது என்றால், வெளிப்படையான முறையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனை பேரையும் இணைத்து அவர்களின் அபிப்பிராயங்களை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு ஏற்றதான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்” – என்றார்.