பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகளே உதவுங்கள் என மன்னார் மாவட்ட பனை கைப்பணி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மன்னார் தலைமன்னார் மாந்தை மற்றும் நானாட்டான் போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக பனை ஓலை மூலமாக செய்யப்படுகின்ற கைவினை பொருட்களை சிறு வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றோம். ஆனால் இதன் மூலமாக சொல்லிக்கொள்ளும்படியான வருமானங்களை இன்னும் நாங்கள் பெறவில்லை.
ஆனாலும் நாங்கள் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து வருகின்றோம்.உள்ளூர் உற்பத்திகளாக நாங்கள் செய்து கொண்டு வருவதால் எமக்கான வருமானம் மிகவும் குறைவாக இருக்கின்றது. மேலும் இந்த கொரோனா பயணத் தடை காரணமாக எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எமது உறவுகள் தாயகத்தில் செய்யப்படுகின்ற இவ்வாறான பொருட்களை பெற்று நீங்கள் அதை சந்தைப் படுத்தினால் எமக்கு பெரிய உதவியாக இருக்கும்” என்றனர்.