பதுளை மாவட்டத்தில் பேருந்து விபத்து – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட  பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்து, 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக காவல்துறையினரின் தகவலில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லுணுகல பகுதியிலிருந்து தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்த தனியார்  பேருந்து ஒன்று, 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்தபோது  பேருந்தில்  சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி  சுமார் 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தில்  இருந்து 10 பேர் இறந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.