Tamil News
Home செய்திகள் படையினர் மீதான சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்ப்போம் – சம்பிக்க உறுதி

படையினர் மீதான சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்ப்போம் – சம்பிக்க உறுதி

“இலங்கையில் பாரதூரமான பிரிவினைவாத யுத்தம் நடைபெற்றபோது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்களை கொல்வதற்கு முயற்சிக்கப்பட்டதோடு, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களை இல்லாதொழித்த பாதுகாப்புத் துறையினரை சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுமானால் அதனை நாம் எதிர்ப்போம்” என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இலங்கையில் பாரதூரமான பிரிவினைவாத யுத்தம் நடைபெற்றது. பல தலைவர்களைக் கொல்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதோடு சிலர் கொல்லப்பட்டனர். எனவே இவ்வாறான அடிப்படைவாதிகளை அழிப்பதற்கு பாதுகாப்புத் துறையினர் முன்னெடுத்த முயற்சிகளை குற்றங்களாகக் குறிப்பிட்டு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால் ஏதேனுமொரு நபர் தனிப்பட்ட ரீதியில் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் அவர் எந்த நிலையிலிருந்தாலும் அது தொடர்பில் உள்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அரசாங்கம் மாத்திரமல்ல, நாமும் இவ்வாறான சர்வதேச விசாரணைகளை எதிர்க்கின்றோம்.

பிரபாகரனைத் தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் தலைவர், அதன் அங்கத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்ற நிலையில், சிறு சிறு குற்றங்களால் விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எந்தளவுக்கு அறிவுபூர்வமானது என்பது தெளிவாகிறது.

எனவே 12 வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த யுத்தத்தை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்காமல் அனைத்தையும் மறந்து சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்றார்.

Exit mobile version