பகிடிவதை விவகாரம்: மற்றொரு மாணவனுக்கும் பல்கலைக்கழகத்துக்குள் வருவதற்கு தடை

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றொரு சிரேஷ்ட மாணவருக்கும் மறு அறிவித்தல் வரை, பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர், புதுமுக மாணவிகள் சிலர் மீது பகிடிவதையில் ஈடுபட்டனர் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்றுக்குழு விசாரணைகளின் அடிப்படையிலேயே இரண்டாவது மாணவருக்கும் உள்நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவுமே, பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக, யாழ்.பல்கலைக் கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்றும், பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.