நோர்வே கடலோரத்தில் ஒதுங்கிய ஈரானிய குழந்தையின் உடல்: பிரிட்டனை நோக்கிய கடல் பயணத்தில் உயிரிழப்பு

நோர்வே கடலோர பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரை ஒதுங்கிய 15 மாத குழந்தையின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆர்டின் என்ற அந்த குழந்தை, படகில் தனது குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு அக்டோபரில் வந்தபோது கடலில் மூழ்கி உயிர் விட்டதும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் திகதி, ஆங்கில கால்வாய் பகுதியில் ரசூல் ஈரான் நெஜாத் (35), மொஹம்மத் பனாஹி (35), அனிடா (9), ஆர்மின் (6) உள்ளிட்டோர் பயணம் செய்த படகு கடலில் மூழ்கியது.

ஆர்டின் குடும்பத்தோடு வந்த படகு மூழ்கும் தருணத்தில் மொஹம்மத் பனாஹியின் மனைவி அனுப்பியதாக அறியப்படும் குறுந்தகவல்களில் ஆங்கில கால்வாயை கடக்கும்போது நிலவும் ஆபத்தான நிலைமை பற்றி கூறியிருந்தார். ஆனால், அதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “லாரிகள் மூலமாக வர வேண்டுமென்றால், அவ்வளவு பணம் எங்களிடம் கிடையாது,” என்றும் மற்றொரு குறுந்தகவலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.