நைஜீரியாவில் படகு விபத்து 156 காணாமல் போயுள்ளதாக தகவல்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 156 பேர் காணாமல்  போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நைஜீரியா நாட்டின் வடமேற்கில் கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகள் படகு ஒன்றில் சென்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால்  அவர்களின் படகு பயணித்த ஒரு மணிநேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  20 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  காணாமல் போன 156 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

இதுபற்றி தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி மேலாளர் யூசுப் பிர்மா கூறும்பொழுது, படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளனர்.  பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் அவர்கள் பயணித்து உள்ளனர்.  பயணிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி நாங்கள் கூறிய அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை.  படகில் 30 பஜாஜ் மோட்டார் சைக்கிள்களும் ஏற்றப்பட்டு உள்ளன.

நாங்கள் இன்னும் மீட்பு பணியை தொடர்ந்து வருகிறோம்.  20 பேரை உயிருடன் மீட்டுள்ளோம்.  காணாமல் போன 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கலாம் என கூறியுள்ளார்.