Tamil News
Home செய்திகள் நெல்லியடி பேக்கரி பணியாளர்கள் 33 பேர் உள்ளிட்ட 95 பேருக்கு யாழ்ப்பாணத்தில் கொரோனா

நெல்லியடி பேக்கரி பணியாளர்கள் 33 பேர் உள்ளிட்ட 95 பேருக்கு யாழ்ப்பாணத்தில் கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 137 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 31 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் என 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 2 பேருக்கும், ஒட்டுச்சுட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. (அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். சிலர் வீதி புனரமைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள். ஏனையோர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.)

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், மாவட்ட பொது வைத்தியசாலையில் 2 பேருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 8 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 36 பேருக்கும் (நெல்லியடி வெதுப்பகம் ஒன்றில் 33 பேரும், நெல்லியடி வர்த்தகர்கள் மூவரும் அடங்குகின்றனர்), தெல்லிப்பழை அந்தோனிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்ட 17 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Exit mobile version