Tamil News
Home செய்திகள் நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்; சி.வீ.விக்னேஸ்வரன்

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்; சி.வீ.விக்னேஸ்வரன்

நீதியின் குரல்கள் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் உண்மையானவர்கள் யார், நேர்மையானவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுத் தாக்கல் செய்திருந்தார் நீதியரசர் விக்கினேஸ்வரன்.

அவருடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர். இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“யார் உண்மையானவர்கள், யார் நேர்மையானவர்கள் என்பது எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் நாடாளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது எனது நம்பிக்கை.

அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பதை என் மக்களுக்கு நான் கூறுகின்றேன்” என்றார்.

Exit mobile version