நிவர் புயல் கடந்தும் – கன மழை தொடர்கின்றது

நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகில் இரவு 11.30 மணிக்கும் அதிகாலை 2.30 மணிக்கும் இடையே கரையைக் கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ட்வீட் செய்துள்ளது.

புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீற்றர் தூரத்திலும், சென்னைக்கு தெற்கே 115 கிலோ மீற்றர் தூரத்திலும் புயல் கரையை கடந்தது. கன மழையும், மணிக்கு 120 முதல் 130 கிலோமீற்றர் வேகத்திலான காற்றும் புதுச்சேரி, கடலூர் கடலோரப் பகுதிகளைத் தாக்கியுள்ளன. காற்று வேகம் அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோமீற்றர் வரை வீசியுள்ளது.

அதே நேரம் வட தமிழகத்தின் கரையோரப் பகுதிகளைப் பலத்த காற்றும் மழையும் தாக்கி வருகின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலும் கடும் மழை பெய்து, பலத்த காற்று வீசிகின்றது. சென்னையின் பல பகுதிகளிலும், பிற மாவட்டங்களின் பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நூற்றுக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.