‘நிலைமாறுகால நீதிக்காக எழுந்திடுவோம்’ மட்டக்களப்பில் மனிதவுரிமைகள் நாள்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையமும் அதன் பெண் உதவி மையமும் இணைந்து சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை கடைப்பிடித்தனர்.

இதனை முன்னிட்டு இன்று காலை நிலைமாறுகால நீதிக்காக எழுந்திடுவோம் என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையின் பிரதான நிலையத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை நடாத்தினர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அஸீஸ், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புஹாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலைமாறுகால நீதிக்காக எழுந்திடுவோம் என்ற கருப்பொருளை வெளிப்படுத்துவதற்காகவும் வலுப்படுத்துவதற்காகவும் தமது கைவிரல் அடையாளத்தினை பதிக்கும் நிகழ்வு இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

IMG 8625 'நிலைமாறுகால நீதிக்காக எழுந்திடுவோம்' மட்டக்களப்பில் மனிதவுரிமைகள் நாள்

அதனை தொடர்ந்து மனித உரிமைகளுக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்தவர்களையும் வன்முறைக்குள்ளாகி உயிர்நீர்த்தவர்களையும் நினைவுகூரும் வகையிலும் ஒளியேற்றப்பட்டு அவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து மனித உரிமைகள் தொடர்பாகவும் பெண்களுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் வன்முறைகள் தொடர்பாகவும் அரங்க செயற்பாட்டு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட வீதி விழிப்புணர்வு நாடகமும் காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருமளவான பெண்களும்,மனித உரிமைகள் ஆர்வலர்கள்,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இனமதவேறுபாடுகளை கடந்து கலந்துகொண்டனர்.