Tamil News
Home செய்திகள் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதேயாகும் –...

நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதேயாகும் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்போன்று நேற்று மாலை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கல்முனை என்பது 100 வருடங்களுக்கு முன்னரே இருந்து முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நகரம். தமிழ் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட உப செயலகத்தை அவர்கள் நினைத்தால் போல தரமுயர்த்த அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.

பொய்யான பல தகவல்களை ஊடகங்களிடமும், மக்களிடமும் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரப்பி வருகிறார்கள். அவர்களின் கருத்துக்களால் முஸ்லிம் புத்திஜீவிகளும் கூட சில நேரங்களில் குழம்பி போகிறார்கள். கல்முனையில் யாருக்கும் எந்தவித விட்டுக்கொடுப்புக்களோ அல்லது அநியாயங்களோ நாங்கள் செய்யப்போவதில்லை. இவர்களின் பொய்யான பரப்புக்களை நாங்கள் நம்ப தேவையும் இல்லை. கல்முனை விவகாரம் பற்றிய முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக என்னிடம் யார் எப்போது வினவினாலும் பதிலளிக்க தயாராகவே இருக்கிறேன்.

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதாகும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தினரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இரக்கமும்,பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. நான் என் மக்களின் உரிமைக்காக போராடும் சண்டைக்காரனாக இருந்து போராடி என்னால் முடிந்த சகல விடயங்களையும் சாதிக்க முயற்சி செய்து வருகிறேன்.

சில நேரங்களில் உரிமை விடயங்களில் எனது சத்தம் உயர்ந்து வந்தால் நான் மஹிந்த அணிக்கு தாவப் போவதாக வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பவன் நான். சரியா பிழையா என்பதை ஆராய முன்னர் எமது கட்சியின் தீர்மானத்தை மதிப்பவன் தயவு தாட்சணைகள் பார்த்து எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version