தோப்பூர் பிரதேசம் உடனடியாக முடக்கப்பட வேண்டும்-இம்ரான்திருமலை மாவட்ட அரச அதிபருக்கு கடிதம்

கோவிட் தொற்று வேகமாக பரவிவரும் தோப்பூர் பிரதேசம் உடனடியாக முடக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிழக்குமாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடித்ததிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வாரம் முதல் தோப்பூர் பிரதேசத்தில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்த மூன்றாம் அலையில் இதுவரை மொத்தமாக 117 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 8 நாட்களில் மட்டும் 82 தொற்றாளர்கள் இனம் காணப்படுள்ளமை இப்பகுதியில் தொற்று வேகமாக பரவி வருகிறது என்பதை காட்டுகிறது.

இதில் அல்லை நகர் மேற்கில் 37 தொற்றாளர்களும் அல்லைநகர் கிழக்கில் 36 தொற்றாளர்களும் தோப்பூரில் 33 தொற்றாளர்களும் இக்பால் நகரில் 05 தொற்றாளர்களும் பாலதோப்பூரில் 06 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

சுமார் 14000 மக்கள் வாழும் பகுதியில் குறுகிய காலத்தில் 117 தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளமை இப்பகுதியின் அபாய நிலையை காட்டுகிறது. இதனால் இதுவரை இப்பிரதேசத்தை முடக்காமல் இருப்பது தொற்றுமேலும் பரவவே வழி வகுக்கும்.

எனவே இப்பிரதேசத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி இப்பிரதேச சிவில் சமூகத்தினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே இது தொடர்பாக ஆராய்ந்து இப்பிரதேசத்தை உடனடியாக முடக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளது.