இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை -11,796 குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 796 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 730 பேர் வெள்ளம், மண்சரிவு, புயல் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 620 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

மேலும், காலி மாவட்டத்தில் ஆயிரத்து 228 குடும்பங்களும், கம்பஹா மாவட்டத்தில் ஆயிரத்து 385 குடும்பங்களும், மாத்தறை மாவட்டத்தில் 663 குடும்பங்களும் பாதிக்கப் பட்டுள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய தாழமுக்கத்தால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், தென்கிழக்கு அரேபிய கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும் எனவும், மறு அறிவித்தல் வரும் வரை தென் கிழக்கு அரேபிய கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.