Tamil News
Home செய்திகள் தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு – மனோவிடம் ரணில், விஜயதாஸ உறுதி

தேர்தல் முறை சீர்திருத்தம் ஒத்திவைப்பு – மனோவிடம் ரணில், விஜயதாஸ உறுதி

“தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களைத் தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் நாடாளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவோம்,என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது பற்றி ஊடகங்களிடம் மனோ மேலும் கூறியதாவது- “தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது. இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்றத் தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது. அன்றைய அமைச்சர், இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தன, தலைமையில் கடைசியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை அரசு காட்ட முயல்கின்றது. இது பச்சைப் பொய்.

பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம். அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம், சட்டத்தைத் திருத்தி, விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதாகும். அதையும்கூட அரசு செய்யவில்லை. இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள், பிறகு இப்போது வேண்டாம் என்று இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்தபோது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார். அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவைச் சந்தித்தபோது அவரும் இதையே எனக்குத் தெரிவித்தார். ஆகவே, இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகின்றது” என்று மனோ கணேசன் தெரிவித்தாா்.

Exit mobile version