தென்னாப்பிரிக்காவின் அதிபராக மீண்டும் சிரில் ராமபோசா பதவியேற்றார்

இரு வாரங்களுக்கு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்டு ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி இன்று அதிபராக ராமபோசா பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் சிரில் ராமபோசா (வயது 66). அந்நாட்டின் வர்த்தக அமைப்பு தலைவர், தொழிலதிபராக இருந்து வரும் அவர், 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நாட்டின் துணை அதிபராக இருந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் (ஏ.என்.சி.) தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அவர் தேசிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்