துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டாம் – திஸ்ஸ அத்தநாயக்க

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என்று அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே அந்தத் தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என அறிந்துகொள்ள முடிகின்றது. இதில் 49 வீதம் இந்தியாவுக்கும், 51 வீதம் இலங்கைக்கும் வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது. தெற்குமுனையமும் 65 வீதம் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அபிவிருத்திகளில் இலங்கைக்கு கிடைத்த இலாபம் ஒன்றுமே இல்லை. இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை இன்றும் நட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம். குறிப்பாக கிழக்கு முனையம் இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய வளமாகும். அதனை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம்.

மேலும் துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 900 பேரளவில் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் துறைமுகம் முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இதனால் இலங்கைக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைவடையும் நிலைமை உருவாகியுள்ளது.

பிரதான சர்வதேச நிறுவனங்கள் இலங்கை வருவதைத் தவிர்த்துள்ளன. துறைமுகத்தின் கடன்கள் மாத்திரம் மொத்தக் கடன்களில் 24 வீதமாகும். இதிலிருந்து துறைமுகங்களை எவ்வாறு மீட்பது, அதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஆராயவேண்டும். தற்காலிக வருமானங்களைக் கருத்தில் கொண்டு நீண்டகால நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது. இப்போதும்கூட துறைமுகத் தில்வரும் வருமானத்தில் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பாரிய நிதி மோசடி” என்றார்.