தீபத்திருநாள் தீபாவளியை இன்று இந்துக்கள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறையுடனும் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறையின் கீழும் நடைபெற்றது.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் குறைந்தளவு பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பூஜை வழிபாடுகளின்போது நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் அழியவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடையவும் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி வழிபட்டனர்.
கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீப ஒழியில் நலம் பெற்று வீடுதிரும்ப வேண்டும் என அங்கு ஆசியுரை வழங்கிய ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தெரிவித்தார்.