திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு வந்த நிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறச்சென்றுள்ளார்.IMG 7367 திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

கொழும்பில் உள்ள ஹோட்டலில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் வைத்தியர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.IMG 7656 திக்கோடை நபருக்கு கொரனா என சந்தேகம் ; மட்டு.வைத்தியசாலைக்கு கொண்டுவர எதிர்ப்பு

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.