தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது

2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி பீச்’ எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் மூலம் உலகில் பிரபலமான, தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலுள்ள ‘பி பி லே’ எனும் தீவிலுள்ள ‘மாயா பே’ கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த கடற்கரை கடந்த ஆண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

மூடப்படுவதற்கு முன்பு வரை இந்த கடற்கரையில் நாள் முழுவதும் 5,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்த கடற்கரை பகுதியின் வாழ்க்கைச் சூழல் மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட உதவி: ஸ்கை நியூஸ்