Tamil News
Home செய்திகள் தாதியர் ஆட்சேர்ப்பில் தகுதிகளைக் குறைக்கும் தீர்மானம்- தாதியர் சங்கம் எதிர்ப்பு

தாதியர் ஆட்சேர்ப்பில் தகுதிகளைக் குறைக்கும் தீர்மானம்- தாதியர் சங்கம் எதிர்ப்பு

தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகுதிகளைக் குறைக்க தீர்மானித்ததன் ஊடாக இந்தத் தொழிலுக்கு பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக, நாட்டின் முன்னணி தாதியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

‘தற்போது தாதியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு விஞ்ஞானப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படுவதாகவும், எனினும் கலை பிரிவியை அடிப்படையாகக் கொண்டும் ஆட்சேர்ப்பு செய்வதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கடந்த வாரம் ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிட்டார்.’

கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச தாதியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய சுகாதார அமைச்சரின் இந்தக் கூற்றை கடுமையாக எதிர்த்துள்ளார்.

தாதியர் சேவை எனப்படுவது விஞ்ஞானத்துடன் தொடர்புடைய சேவை எனவும், விஞ்ஞானப் பிரிவில் கற்றவர்கள் மாத்திரமே இதனை கற்க முடியுமெனவும் தொழிற்சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

‘இது மற்றவர்களுக்கு எளிதானது அல்ல. அவர்களை உள்ளீர்ப்பது அது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும். இது நோயாளிகளுக்கு ஆபத்தானது’ சர்வதேச மற்றும் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தாதியர்கள் ஆட்சேர்ப்புத் தகுதிகளை மாற்றுவதற்கான யோசனையை உடனடியாக மீளப் பெறுமாறு சமன் ரத்னபிரிய சுகாதார அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தாதியர் சேவைக்கு குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்களே கிடைப்பதால், உயர் தரத்தில் கலைப் பிரிவில் கற்ற மாணவர்களை இணைத்துக்கொள்ள அரசு தீர்மானித்திருந்தாலும், தாதியர் சேவைக்கு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சுகாதார அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மறுபுறம், ஆண்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதை ஐந்து சதவீதமாக மாற்றியுள்ளனர். ஆகவே, இது உயர் தரத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ள விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு அநீதியான விடயமாக மாறியுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை தாதியர்கள் தமது தொழில் ஊடாக அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பை, சுகாதார அதிகாரிகளின் செயற்பாடுகளினால் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் முன்னர் குற்றஞ்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version