Tamil News
Home செய்திகள் ‘தலைவர் பிரபாகரனை கொன்றேன்’ என கோட்டபாய சொன்னதே மிகப் பெரிய சாட்சியம் – சிறிதரன்

‘தலைவர் பிரபாகரனை கொன்றேன்’ என கோட்டபாய சொன்னதே மிகப் பெரிய சாட்சியம் – சிறிதரன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நானே கொன்றேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், கூட்டமைப்பு சார்பாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  மற்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக சிறிதரன் குறிப்பிடுகையில்,

“ஜெனீவாவில்  கொண்டுவரப்பட இருக்கின்ற  தீர்மானம் தொடர்பாக மற்றும் அந்தத் தீர்மானத்திற்கு இருக்கின்ற சவால்கள், அந்த சாவல்களை எதிர்கொள்வதற்காக  ஒருங்கிணைந்த நாடுகள் எவ்வாறான விடயங்களை எதிர்கொள்கின்றன, அந்தச் சாவால்களை அவர்கள் எவ்வாறு  சாமாளிக்கப் போகிறார்கள், அதற்கு தமிழர் தரப்பான எங்களுடைய பங்களிப்பு என்ன மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், இன்றுள்ள  களச்சூழலில் தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த அரசாங்கம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொதுமக்கள்  போன்றோரை விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி வருவதையும் நாங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன்,  அண்மையில்  அம்பாறையில் உகுண பிரதேசத்தில் உரையாற்றும்போது, ‘பிரபாகரனை நான் கொன்றேன்’ என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அண்மையில் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம், நியூயோர்க் பல்கலைக்கழகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில்  கலந்துகொண்ட, போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரொப் ஸ்ரீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வாறான விடயங்களைச் சாட்சியமாக வைத்து நடவடிக்கை எடுக்க முடியுமெனன அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்”  என்றார்.

Exit mobile version