இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்குத் தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு உள்ளிட்ட தெரிவுகளுக்கு எதிராகவும், நாளை 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 17ஆவது தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அடுத்து இடைக்காலத் தடை கட்டாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்த கட்டமாக எவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டபோதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“75 வருட கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாகக் கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
விசேடமாக கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீளநடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்மானத்தைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன்.
விசேடமாக, நீதிமன்றம் புதிய நிர்வாகத் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எவ்வாறாயினும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், எதிராகவும் பல சூழ்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தச் சூழ்ச்சிகள் பற்றி புரிதல்களும் எமக்குத் தெளிவாக உள்ளன. எனவே, அனைத்து தடைகளையும் முறையாகக் கையாண்டு அவற்றை கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம்” என்றும் சிறீதரன் தெரிவித்தாா்.