தமிழ் மொழியில் வாக்காளர் பட்டியல் கேட்டு உண்ணா நோன்பு மேற்கொண்டவர் கைது

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தேர்தல்கள் ஆணையாளரான மகிந்த தேசப்பிரியவை பதவி விலகக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தம்பிராசா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்ட தபால்மூல வாக்களிப்பவர்களின் பெயர் விபரங்கள் தனிச் சிங்களத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்தும், அந்தப் பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.

இதனை எதிர்த்து இன்று(14) மாலை யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இப்போராட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே யாழ். மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.