தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – ஜனா எம்.பி

உண்மையில் இந்த வாரம் என்பது மே மாதம் 18ம் தேதியை ஒட்டிய வாரம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு துக்கமான கரி நாட்களைக் கொண்ட வாரமாக தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளார் நாயகமும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஸ்டித்து வரும் இந்த நிலையில் இலங்கை அரசு தன்னுடைய போர் வெற்றியினை கொண்டாடிக் கொண்டு வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் இந்த போர் வெற்றியினை பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்.

நாங்கள் 2009 மே 18 ஐ ஒட்டிய காலப்பகுதியில் கிட்டத்தட்ட 140,000 பொதுமக்களை இழந்திருந்ததாக மன்னாரில் ஆயராக இருந்த ராயப்பு யோசப் ஆண்டகை வழங்கியிருந்தார்.

இந்தப் போர் தொடங்கிய காலம் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சம் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதிலே பல தலைவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தாலும் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தினை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம். இந்த முறையும் அந்த வகையிலே நினைவுகூறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிங்களப் பேரினவாதிகள், இனவாதிகள் குறிப்பாக சரத் வீரசேகர போன்றவர்கள் இதற்கு எதிரான கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். நேற்றைக்கு முன் தினம் கூட நினைவு தினத்தினை ஒட்டி நடைபெற்ற ஊர்திப் பவனி, விளக்கேற்றல்கள், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் போன்றவை எவை எதற்காக என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.

உண்மையிலேயே எங்களது மக்கள் எங்களுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூர ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. அந்த வகையில் நாங்களும் ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இந்தத் தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த இரண்டு வருடங்களாக பெரும் தொற்றுக் காரணமாக அதனை அலுவலகங்களிலும் செய்திருந்தாலும், வழமையாக கல்லடிக் கடற்கரையிலே நாங்கள் இந்த நினைவு கூறலைச் செய்வது வழமை. இந்த முறை இன்றைய தினம் கல்லடிக் கடற்கரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியம் இந்த நினைவு கூரலை இன்று பிற்பகல் 5.00 மணிக்கு செய்வதற்காக நாங்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றோம்.

இந்த நினைவு கூறல் நிகழ்வில் இன,மத, சமய வேறுபாடுகள் இன்றி நாங்கள் ஒரு உணர்வுபூர்வமான மனிதனாக தமிழ் பேசுபவனாக தமிழ் இனத்திற்காக, தமிழ் இனத்தின் உரிமைக்காகப் போராடிய இனமாக நாங்கள் இதனை நினைவு கூறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு கல்லடி கடற்கரைக்கு ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக உருவாகிய 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபை முறைமை என்பது 87 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் மாகாண சபைகளுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஆளுநர்கள் மாறி மாறி மாகாணங்களை ஆண்டு கொண்டு இருந்தார்கள். உண்மையிலேயே வடக்கு கிழக்குக்காகத்தான் அதை முக்கியப்படுத்தி இந்த மாகாண சபை முறைமையே வந்தது.

ஆனால் நீண்ட காலமாக கிட்டத்தட்ட 18 வருடங்களாக கிழக்கு மாகாண சபை அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. வடக்கு மாகாண சபை 23 வருடங்களாக அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தார்கள். கிழக்கு மாகாண சபையிலே இரண்டு தடவைகள் தேர்தல் நடைபெற்றிருந்தது. வடமாகாண சபையிலே ஒரு தடவை மாத்திரமே தேர்தல் நடந்திருக்கின்றது.

ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதிகளான ஆளுநர்களாலேயே இந்த மாகாணங்கள் ஆளப்பட்டு கொண்டிருந்தது. கிழக்கு மாகாணம் பல ஆளுநர்களை கண்டிருந்தாலும், தற்போது ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உண்மையிலேயே ஆளுநர்கள் என்பது ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிகள் என்பது தெளிவாகின்றது.

ஜனாதிபதி மாறும் போது அந்தந்த மாகாண ஆளுநர்கள் ராஜினாமா செய்வதுதான் அரசியல் ரீதியாக வழமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதுடன் இவர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இருந்தும் ராஜினாமா செய்யுமாறு கூறியும் அடம்பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்றைக்கு முன் தினம் வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு, இன்று புதியதொரு ஆளுநர் கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட இருக்கின்றார்.

நான் கூற வருவது என்னவென்றால் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்திலே ஆளுநராக இருந்த காலத்திலேயே கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு ஒரு இருண்ட யுகமாகவே இருந்தது. அவரது முழு நோக்கமும் சிங்கள ஏகாதிபத்தியத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. இரண்டு சிங்கள பிள்ளைகளுக்காக ஒரு பாடசாலையை திறப்பதும், கிழக்கு மாகாணத்தில் சிங்கள பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்காக சிங்கள மக்கள் குடியேற்றத்தை அதிகரிப்பதுமே அவருடைய முழு நோக்கமாக இருந்தது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே 6 லட்சம் மாடுகள் இருக்கும் நிலையில் பண்ணையாளர்களை மிகவும் மனம் நோகும் அளவிற்கு அந்த மாடுகளை மேய்க்க முடியாத நிலைக்கு அயல் மாவட்ட சிங்கள மக்களை இந்த மாவட்டத்திற்கு உள்ளே கொண்டு வந்து சேனைப்பயிர்ச்செய்கையை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மயிலுத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களிலும் பட்டிப்பளை பிரதேசத்திலே கந்தமல்லிசேனை என்கின்ற பிரதேசங்களிலும் அவர்களை கொன்று குடியேற்றி எங்களுடைய தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கான நடவடிக்கையை அவர் எடுத்திருந்தார். ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களின் ஒரு பிரதிநிதியாகவே அவர் இங்கு செயல்பட்டிருந்தார்.

அந்த வகையில் இன்றிலிருந்து கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு அந்த இருண்ட யுகம் மாற வேண்டும். ஒரு வெளிச்சமான சந்தோஷமான எதிர்காலம் இருக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களிலே இன்று பதவியேற்று, கிழக்கு மாகாண சபைக்கு வரும் ஆளுநர் கூட இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழுகின்றார்கள். சரியோ, தவறோ எப்படிப்பட்ட குடியேற்றங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்று இருந்தாலும் இந்த மாகாணத்திலே மூவின மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாகாணத்தை எந்தவித மக்களினதும் மனம் நோகாமல் எதிர்காலத்திலே பாதிக்கப்படாமல் சமமாக இந்த மாகாணத்தையும் மாகாணத்தில் வாழும் மக்களையும் புதிதாக வரும் ஆளுநர் ஒருதலைப் பட்சமாக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வழிநடத்தாமல் மிகவும் நிதானமாக வழி நடத்துவார் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் அறிந்த வகையில் ஒரு அரசியல்வாதியாக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட குடும்பத்திலிருந்து வருபவராக அந்த ஆளுநர் இருக்க போகின்றார் என்பதனை நாங்கள் அறிந்து கொள்கின்றோம். செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்துக்கு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.

அந்த அரசியல் பாரம்பரிய பின்னணியை கொண்ட குடும்பத்தில் இருந்து மாத்திரமில்லாமல், ஒரு மாகாண அமைச்சராக நீண்ட காலமாக இரண்டு தடவைகளுக்கு மேல் பணியாற்றியவர். மாகாணத்தின் நிர்வாகம் மாகாண மக்களது மனோ நிலையைப் புரிந்தவராக எந்த ஒரு இன மக்களையும் பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார், நடந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவரிடமும் எந்தவித மக்களும் பாதிக்கப்படாமல் ஒரு ஆட்சி நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஒரு நாள் தற்போதைய சூழ்நிலையிலே மாகாணங்களிலே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதாகவும், இன்னும் ஒரு நாள் அதிகார பகிர்வு தொடர்பாக ஆராய்வதாகவும், மூன்றாவது நாள் அந்தந்த மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக ஆராய்வதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டிலே நாங்கள் ஒரு முடிவு எடுத்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே அபிவிருத்தி தொடர்பாகவோ அல்லது தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவோ மாகாண மட்டத்திலேயே உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேசுவதை பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

இருப்பினும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச வேண்டுமாக இருந்தால் கடந்த காலங்களிலே வடக்குக் கிழக்கை இணைத்துத்தான் நாங்கள் அரசியல் ரீதியாக எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக நாங்கள் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகப் பேசுவதாக இருந்தால் வடக்குக் கிழக்கு இரண்டு மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டி பேச வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் வரமாட்டோம் என கூறி இருந்தோம்.

அந்த வகையில் அவருடைய நிகழ்ச்சி நிரலினை மாற்றி இருந்தார். அபிவிருத்தி தொடர்பாக ஒதுக்கப்பட்ட திகதி பிற்போடப்பட்டது. தற்போதைய பிரச்சனைகள் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை பேசி இருந்தோம். கடந்த வெள்ளிக்கிழமை இருந்த அதிகார பரவல் பிரச்சனைகள் நேற்றைக்கு முதல் நாள் திங்கட்கிழமை பேசியிருந்தோம். ஆனால் அந்த இரண்டு நாட்களுடைய பேச்சு வார்த்தைகளிலும் இருந்து தமிழ் மக்களுக்கான எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கூடுதலாக பேசப்பட்டது. நிலம் தொடர்பான பிரச்சனைகள், காணி கையகப்படுத்தல், தொல்பொருள் திணைக்களம், வன இலாகா, வன ஜீவராசிகள், மகாவலி அபிவிருத்தி சபைகள் போன்றவையினால் கையகப்படுத்தப்பட்ட, கையகப்படுத்தப்பட இருக்கின்ற காணிகள் தொடர்பாகப் பேசி இருந்தோம். ஆனால் பெரிதாக ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

எதிர்காலத்திலே காணிகள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்கின்ற உறுதிமொழி தான் கொடுக்கப்பட்டது. தவிர கையகப்படுத்தப்பட்டு தற்போது அவர்களது அபிவிருத்திகள் அதாவது சில இடங்களிலே இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்ற வெடுக்குநாரிமலை குருதூர் மலை போன்ற பிரதேசங்களில் 100% தமிழர்கள் வாழும் காங்கேசன் துறையிலே தையிட்டியிலே விகாரை கட்டப்பட்டு திறக்கப்படுகின்றது. அது போன்று எங்களது இந்துக்களின் பாரம்பரியமான கன்னியா வெந்நீர் ஊற்று பறிபோய் இருக்கின்றது. பிள்ளையார் கோயில் உடைக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டிருக்கின்றது. ஏன் பாடல் பெற்ற திருத்தலமான கோனேஸ்வரத்தைக் கூட, கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவைகளுக்கான தீர்வு எதுவுமே வைக்கப்படவில்லை.

இதற்கு மாறாக மிகவும் முக்கியமான அதிகார பரவலாக்கம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை பேசப்பட்டது. ஜனாதிபதி வடகிழக்கிலுள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் அதாவது குறிப்பாக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையிலே இன்று 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன் கையெழுத்திட்டு இருக்கின்றார். ஒரு ஆவணத்தைக் கொண்டு வந்திருந்தார். வடகிழக்கிலே எட்டு கட்சிகள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

அதாவது மாகாண சபை தேர்தல் நடைபெறும் வரைக்கும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது மாகாண சபைக்கு ஒரு ஆலோசனை சபையை அமைத்து, இந்த அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகப் பேச வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி அதனை நிராகரித்து இருந்தோம். காரணம் என்னவென்றால் ஒரு ஆலோசனை சபையை மாகாணங்களுக்கு அமைத்தால் அதை ஒரு சாட்டாக வைத்து மாகாண சபைத் தேர்தலை பின் போடுவதற்கு நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருக்கும்.

அதிகார பகிர்வு என்பது வேறு ஆனால் தற்போதைய சூழ்நிலையிலே தமிழ் பேசும் மக்கள் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒருமித்து வைத்து ஜனாதிபதி பேசும்போது ஒரு உடன்பாடு வரக்கூடிய சூழ்நிலை தற்போதைய நிலையில் இல்லை.

எனவே முதல் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு இலங்கை அரசியல் அமைப்பிலேயே தற்போது இருந்து கொண்டிருக்கும் இந்த 13 வது திருத்தச் சட்டம் அதனுடாக பகிர்ந்தளிக்கப்பப்பட்ட அதிகாரங்கள் உண்மையிலேயே ஏற்கனவே பகிர்ந்து அளிக்கப்பட்டு மாகாண சபை முறைமையின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த பல அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெறப்பட்டிருக்கின்றது.

அதை தவிர காணி அதிகாரம் பொலீஸ் அதிகாரம் போன்றவை அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது ஒட்டுமொத்தமாக மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கங்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்பையே மீறி கொண்டிருக்கின்றார்கள்.

நான் நினைக்கின்றேன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் நிச்சயமாக அரசாங்கம் பேசத்தான் வேண்டும்.

எங்களைப் பொருத்தமாட்டிலே எங்களுக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்குள் மக்களுக்குள் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் அந்த அடிப்படையிலேயே வரும் ஒரு தீர்வு தான் நிரந்தரமான ஒரு தீர்வாக இருக்கும் அதற்காக நாங்கள் முன்னோக்கி நகர வேண்டும் என்றார்.