தமிழ் மக்களை நாடுகடத்தும் திட்டத்தை யேர்மனி கைவிடவேண்டும் – கஜேந்திரகுமார்

யேர்மனியில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை சிறீலங்காவுக்கு நாடுகடத்துவதை யேர்மன் அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யேர்மன் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“மார்ச் 30 ஆம் நாள் புகலிடக் கோரிக்கையாளர்களான பெருமளவு தமிழர்களை சிறீலங்காவுக்கு நாடுகடத்துவதற்கு யேர்மன் அரசு திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாம் பெரும் கவலையடைந்துள்ளோம்.

யேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை. அச்சங்களுக்கு அப்பால் சிறீலங்காவில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய ஒரு வார காலத்திற்குள் தமிழ் மக்களை சிறீலங்காவுக்கு நாடுகடத்துவது எதிர்மறையான செயலாகும். புகலிடக்கோரிக்கையாளர்களின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முடிவை யேர்மனி உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.