Tamil News
Home செய்திகள் தமிழ் நீதிபதிகளின் தீர்ப்புகளை சிங்கள அரசு ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை

தமிழ் நீதிபதிகளின் தீர்ப்புகளை சிங்கள அரசு ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை

இலங்கையில் தமிழ் நீதிபதிகளின் தீர்ப்புகளை சிங்கள அரசும், சிங்கள இனவாதிகளும் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இலங்கையில் இருவேறு சட்ட விதிகள் உள்ளன என்ற யதார்த்தத்தை இது பிரதிபலிக்கிறது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அறிக்கை வருமாறு:

இனவாதிகளின் அரசியல் அழுத்தமும், உயிர் அச்சுறுத்தலும் தமிழ் நீதிபதியை இலங்கையை விட்டு வெளியேறத் தூண்டியது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஆர்.சரவணராஜா, இலங்கை அரச மற்றும் பௌத்த பிக்குகளின் தொடர் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  முல்லைத்தீவு குருந்தூர்மலை மற்றும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்குகளில் நீதியான உத்தரவை பிறப்பித்ததில் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளான நீதிபதி,  2023-09-23 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தனது பதவி விலகலை அறிவித்த பின்னர் தனது பாதுகாப்பைத் தேடி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக இராஜினாமா செய்வதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் பெரும்பாலும் தங்கள் அரசியல் நடவடிக்கைகள், பொது அறிக்கைகள் மற்றும் நிதி நலன்களில் தங்கள் பக்கச்சார்பற்ற தன்மையையும் பக்கச்சார்பின்மையின் தோற்றத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் நீதித்துறையின் அதிகார வரம்பிற்கு ஏற்ப மாறுபடலாம். திரு. சரவணராஜா மிகவும் நடுநிலையான, நேர்மையான மனிதர் என்று பலராலும் பேசப்படுகின்ற ஒரு நீதிபதி ஆவார்.

ஒரு சனநாயக சாட்டில் அரசியல்வாதிகள் சட்ட அமைப்பில் செல்வாக்கு செலுத்தக்கூடாது, ஆனால் இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள நீதிபதிகள் பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து நிறைய அழுத்தங்களை அனுபவிக்கின்றனர். உதாரணமாக சிங்கள அரசியல்வாதியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் வீரசேகர, நீதிபதி சரவணராஜாவின் நீதித்துறை தீர்ப்புகளை விமர்சித்ததுடன் அவரை ஒரு பைத்தியக்காரர் என்று பாராளுமன்னத்தில் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய நீதிபதிகள் துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரித்துடையவர்கள், மேலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட வேண்டும்.  இலங்கையில் தமிழ் நீதிபதிகளின் தீர்ப்புகளை சிங்கள அரசும், சிங்கள இனவாதிகளும் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இலங்கையில் இருவேறு சட்ட விதிகள் உள்ளன என்ற யதார்த்தத்தை இது பிரதிபலிக்கிறது, மேலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பிக்குகள் மற்றும் குண்டர்களின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை மட்டுமல்ல இவர்கள் என்றுமே தண்டிக்கப்பட்டதுமில்லை.

சர்வதேச விதிமுறைகள் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன் அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் அல்லது அவர்களின் பணிகளில் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கங்களுக்கு கடமை உள்ளது. சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் ஒருமைப்பாடும் வெளிப்புற செல்வாக்கு மற்றும் அச்சுறுத்தல் இல்லாமல், சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குவது நீதிபதிகளின் திறனைப் பொறுத்தது. அநத வகையில் சரவணராஜா பல துணிச்சலான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

நீதியரசர் சரவணராஜாவிற்கு ஏற்பட்ட அவலநிலை என்பது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் சீர்குலைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அந்தவகையில் இலங்கை நீதி தேவதையை தலைகுனிய வைத்த ஒரு தோல்வியுற்ற அரசாக அடையாளப்படுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்காது என்பதை இது நிரூபித்து நிற்பதோடு ஈழத்தமிழர்களுக்கு இலங்கைத்தீவில் பாதுகாப்பு இல்லை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது.  பில்லியன் கணக்கான பொருளாதார உதவிகள் மூலம் தோல்வியுற்ற அரசுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பவர்கள் கள யதார்த்தத்தை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதிபதி சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கவை வன்மையாகக் கண்டிப்பதோடு, இலங்கையை பிணையெடுக்க முயற்சிக்கும் நாடுகள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

ஸ்டீவன் புஸ்பராஜா க.

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

 

 

Exit mobile version