தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் நாடாளுமன்ற வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ். தவபாலனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் எஸ்.தவபாலன், பல்வேறு சமூக சேவைகள் மற்றும் தமிழர் நலன்சார் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் சேவையாற்றும் கிராமத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இவ் விசாரணைகளில் அவரது குடும்ப உறுப்பினர்களது விபரம், வெளிநாட்டு தொடர்புகள், முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள், பல்கலைக்கழகத்தில் செயற்பட்ட விதம் தொடர்பில்   விசாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.