மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் சில போடப்பட்டுள்ளன.குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மட்டு ஊடக அமையத்திற்குள் ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர் சென்று அலுவலகத்தை திறந்த போது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
வீசப்பட்ட துண்டு பிரசுரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
எச்சரிக்கை! எச்சரிக்கை!
இவர்கள் தான் வெளிநாட்டு புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ்.
இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு
வாலசிங்கம் கிருஷ்ணகுமார், செல்வக்குமார் நிலாந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன், குகராசு சுபோஜன், நல்லதம்பி நித்தியானந்தன், வடிவேல் சக்திவேல், சுப்பிரமணியம் குணலிங்கம்.