தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தமிழ் எம்.பிகள் பேச்சு

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களையும் பிரதி வெளிவிகார அமைச்சர் தாரக அவர்களையும் தமிழ் எம்பிக்கள் சந்தித்து பேச்சு நடாத்தினர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரதமர் மகிந்தராஜபக்சவிடம் கையளித்திருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முகவரியிட்டு வழங்கப்பட்ட அந்தக் கடிதத்தின் பின்னர் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இன்று அமைச்சரை சந்தித்து கைதிகள் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை விரைவாக கையாள வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வலியுறுத்தியிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களைச் சேர்ந்தவர்கள் இந்தச்  சந்திப்பில் கலந்து கொண்டனர். குறித்த விடயம் தொடர்பில் கரிசனை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் முகநூல்களில் புகைப்படங்களை பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த 8 பேரது விடுதலை தொடர்பாகவும் பேசப்பட்டது.

போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூருவதற்கு நீதிமன்றங்கள் அனுமதித்திருந்த நிலையிலும் கூட தமது உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக அப்பாவி மக்கள் 8 பேர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பற்றி அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களது விடுதலைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

மேற்படி சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், விநோநோகராதலிங்கம், கலையரசன், இரா. சாணக்கின்,  எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கோ.கருணாகரம், த.சித்தார்த்தன், மனோ கணேசன், இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.