Home செய்திகள் தமிழ்நாட்டில் இனவழிப்பு நினைவு நிகழ்வுகள்

தமிழ்நாட்டில் இனவழிப்பு நினைவு நிகழ்வுகள்

இந்தியாவில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் பல இடங்களில் வழமையாக நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக மக்கள் வீட்டினுள்ளே முடக்கப்பட்டதுடன், ஊரடங்குச் சட்டமும் நடைமுறையில் உள்ளதால், பொது இடங்களில் இந்நிகழ்வு நினைவுகூரப்படவில்லை.
தமிழ்நாட்டிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

கொரோனா லொக்டவுனால் வீடுகளில் இருந்தபடியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைப்பிடிக்க மே 17 இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதேபோல் மதிமுக, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடைப்பிடித்தன.98338584 2931286766948567 5989292822954508288 n தமிழ்நாட்டில் இனவழிப்பு நினைவு நிகழ்வுகள்

வழமையாக தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வில் ஈழ ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள்வதுண்டு. அத்துடன் ஈழ ஆதரவுக் கட்சிகள் ஈழத் தமிழர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இம்முறை பொது நிகழ்வுகள் நடைபெறாமையால் ஊடகங்கள் இந்த செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போல தெரிகிறது. நிகழ்வை மேற்கொண்டவர்கள் தங்கள் இணையத்தளங்கள் வழியாகவும், யூரியூப் வழியாகவும், தங்கள் முகநூல்கள் வழியாகவுமே நிகழ்வை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இருந்தும் ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதற்கமைவாக oneindia எனும் ஊடகம் தனது பதிவில்

உலகம் முழுவதும் தமிழர் வாழும்நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (மே 18) நிகழ்வுகள் 17ஆம் திகதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நந்திக்கடலில் 18ஆம் திகதி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழீழ தனிநாடு கோரி இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தினர் விடுதலைப் புலிகள். தமிழருக்கு தனிநாடு என்ற கொள்கையில் அடிப்படையில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் போராட்டத்தை சர்வதேச நாடுகள் பயங்கரவாத செயலாக கருதின.

இதனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் யுத்தத்திற்கு அத்தனை உலக நாடுகளும் உதவின. இதன் விளைவாக 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது 2 இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நூற்றாண்டின் மிக கோரமான இனப்படுகொலையாகும். எனக் குறிப்பிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தமது இணையப் பதிவில் தமது நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளனர்.
மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீமான் அவர்கள் எழுச்சிச் சுடரேற்றினார், கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று உயிரிழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர் என பதிவிட்டுள்ளனர்.

தினமணி பத்திரிகையில்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் நினைவாக வீடுகளில் விளக்கேற்றுமாறு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.

மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் கருத்துத் தெரிவிக்கும் போது, 2009ஆம் ஆண்டு மத்திய அரசில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியும், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக வும் இந்த படுகொலைகளை தடுக்கத் தவறி விட்டன என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழம் இல்லாமல் தமிழ் நாட்டில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஓவியர் புகழேந்தி தனது இல்லத்தில் சுடரேற்றி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்ததாக தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்

வைகோ அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை தனது இணைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு அனேகர் தமது இணையத்தளங்கள் ஊடாகவும் யூரியூப் ஊடாகவும், முகநூல்கள் ஊடாகவும் தங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version