பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழர்கறின் ”காலவரையறையற்ற ஒரு பாரம்பரியம்” என்னும் கண்காட்சியில் கலந்து கொண்ட பிரித்தானிய எதிர்க்கட்சி மற்றும் தொழிற்கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜெரோமி கோர்பின் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பை பார்த்து தனது வியப்பைத் தெரிவித்தார். அத்துடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒளிப்படங்களைப் பார்த்து, ஜெரமி கோர்பின் கண்கலங்கினார்.
தமிழ் தகவல் நடுவகத்தின் (TIC) ஏற்பாட்டில் நடைபெற்ற இரு நாட்கள் கொண்ட இப்பெரும் கண்காட்சியின் 2ஆவதும் இறுதி நாளுமான நேற்று (20) பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் விழாவின் நேற்றைய நாளுக்கான ஆரம்ப மங்கள விளக்கினை ஏற்றி, நாடாவை வெட்டி விழாவினை ஆரம்பித்து வைத்தார்.
அடுத்து இருந்த முள்ளிவாய்க்கால் ஒளிப்படங்கள் சிலவற்றைப் பார்த்ததும் கவலையடைந்த கோர்பின் தனது கவலையைத் தெரிவித்தார்.
மேலும் இக்கண்காட்சியில் இலங்கைத் தீவில் தமிழ் மொழியால் ஒன்றிணைந்துள்ள அனைத்து தரப்பினரதும் வாழ்வியல், கலாசாரம், பண்பாடு மற்றும் அரசியலை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள், காட்டூன்கள், கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் சமூக செயல்முறை பட்டறைகள், விரிவுரைகள், தமிழர்களின் பாரம்பரிய கலைகள் போன்றனவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.