Tamil News
Home செய்திகள் தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது – ஆளும் தரப்பு பிரதம கொறடா பிரசன்ன

தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது – ஆளும் தரப்பு பிரதம கொறடா பிரசன்ன

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒரு போதும் சாத்தியமாகாது. அரசாங்கம் அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்திய பயணம், இந்திய பிர தமருக்கு தமிழ் கட்சிகள் கடிதம் அனுப்புவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது, அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நிகழும். இலங்கை தொடர்பாக இந்திய தரப்புக்கு பல விடயங்கள் தெரிவிக்கப்படும். குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறது.

இதனால், தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு ஜனாதிபதி அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இந்திய தரப்புக்கு தெளிவுபடுத்துவார். தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு முட்டிமோதிக் கொண்டு கடிதம் அனுப்புவது பயனற்றது. அரசியல் இலாபம் கருதியே தமிழ்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை உடனடி சாத்தியமற்றது. பாராளுமன்றத்தின் மூலமே இது அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சமஷ்டி தீர்வை கோருகின்றன. இது ஒருபோதும் சாத்தியமற்றது. அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்காது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி என்பது நாட்டை துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது. இருக்கின்ற அரசமைப்பை மறுசீரமைத்து அல்லது புதிய அரசமைப்பு நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்துக்குள் வழங்குவார் என்றார்.

Exit mobile version