7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை – கே.எஸ்.அழகிரி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று (21) செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி கூறும்போது, “குற்றவாளிகள் யாரையும் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பாகுபாடு பார்க்காதீர்கள். ஒருவருக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்றாலும் சரி, விடுதலை அளிக்க வேண்டுமென்றாலும் சரி அதனை நீதிமன்றங்கள்தான் செய்ய வேண்டுமே தவிர, அதில் அரசியல் அழுத்தங்கள் கூடாது. இந்த அழுத்தங்கள் சமூகத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகளை உருவாக்கும். சட்ட ஒழுங்கு இல்லாமல் போகும்.” என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சிறையில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ விசாராணைக் குழுவும் 7 பேர் விடுதலையில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியது.

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். 7 பேர் விடுதலை தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. 7 பேரையும் விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று  கூறியுள்ளார்.