தமிழர்களை ஒரு தரப்பாக முனையும் வெளிவிவகாரக் கொள்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் புவிசார்,பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு கண்டுள்ளது.

சுவிசில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த நேரடி அமர்வின் மையப்பொருளாக அமைந்திருந்த வெளிவிவகாரக் கொள்கை வரைவு விவாதத்தின் போது, அரசியல் ஆய்வறிஞர் மு.திருநாவுக்கரசு, பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் மையக்கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அரசவை உறுப்பினர்களது தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அனைத்துலக உறவுகளைப் பேணி வளர்த்து, அவற்றின் விளைச்சலை உரிய தருணத்தில்; அறுவடை செய்தல் என்பதனை ஒரு மூலோயமாகக் கொண்டு செயற்படுதல் அவசியமாக உணரப்படுகிறது. இதனால் தமிழர் தேசத்துக்கான அனைத்துலக உறவுக் கொள்கை மட்டுமன்றி, தமிழர் தேசத்தின் நலன்களை அடைவதற்கான அனைத்துலக உறவுக் கொள்கையினை வகுக்க வேண்டியது தருணம் இதுவென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசம் என கல்வியாளர்கள், வள அறிஞர்கள் உட்பட பொதுமக்களின் பரந்துபட்ட கருத்துக்களை உள்வாங்கியவாறு இவ்வரைவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்து முடிக்க இருப்பதோடு, இது பற்றிய பொது அறிவித்தல் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது.

சுவிசும், லண்டனும் இணைந்தததாக இடம்பெற்றிருந்த இம்மூன்று நாள் அமர்வின் போது, நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சுக்களது செயற்பாட்ட அறிக்கை, பக்க நிகழ்வுகள், யாப்பு திருத்தம், தமிழீழத் தேசிய அட்டை உட்பட பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டிருந்தன என்பதோடு, அடுத்து அமர்வு அமெரிக்காவில் இடம்பெற இருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.