Tamil News
Home உலகச் செய்திகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்

தமிழகம், புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று (06)  காலை 7:00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் இரவு, 7:00 மணி வரை, வாக்களிக்கலாம். ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், நேற்று முன்தினம் (ஏப்.4) இரவு, 7:00 மணியுடன் நிறைவடைந்தது.

கொரோனா நோய்த் தொற்று 2-ஆம் கட்டமாக அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குச்சாவடிகளில், கையுறை மற்றும் கிருமிநாசினி என பல சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மறக்காமல் முகக்கவசம் அணிந்து, வாக்களிக்குமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் வாக்காளர்கள் வாக்குப்பதிவின் போது கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளா்களுக்கு கையுறைகள் வழங்கப்படுவதுடன் உடல் வெப்பம் அளவிடும் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்கும்போது கையொப்பமிடுவதற்காக தங்களுக்கென தனியே பேனாவை எடுத்து செல்வது பாதுகாப்பானதாக அமையும் என்றும் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.

தேர்தல் முடிவுகள் மே 2ஆம் திகதி வெளியிடப்படும். முக்கிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. சில இடங்களில் வாக்களிக்கும் இயந்திரம் பழுதடைந்ததாகவும், இதனால் வாக்காளர்கள் காத்திருந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது.

Exit mobile version