தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றது –மட்டு.மாநகரசபை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும் என மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 27 ஆவது சபை அமர்வானது இன்று 05.12.2019 (வியாழக்கிழமை) காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு தலைமையுரையாற்றிய முதல்வர், தற்போது நாடெங்கும் பெய்து வரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பின் பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் கல்வி நிலையங்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற காரணத்தினால் அங்கு நடைபெறுகின்ற வகுப்பினை தவிர்க்க முடியாத நிலையில் வருகை தருகின்ற பிள்ளைகளும் தொடர்ச்சியான மழை மற்றும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்டு நோயுறுகின்றதாகவும், மற்றும் வகுப்புக்கள் இடம்பெறுகின்ற வளாகத்திலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் டெங்கு போன்ற நோய்த் தொற்றுக்களும் பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் பெற்றார் விசனம் தெரிவித்ததுடன் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாட்டினை ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை சீரடையும் வரை மாணவர்களின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு கருதி இடைநிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளனர்.

எனவே பெற்றோர்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், மாணவர்களை நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துமாறு பகிரங்கமாக அறிவித்தார்.

அண்மையில் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைய மார்கழி மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் அடுத்த வருடம் தை மாதம் 05ஆம் திகதி வரை விடுமுறை விடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்;பட்டிருந்தாகவும், இருப்பினும் தற்போது நிலவி
வருகின்ற அசாதாரண காலநிலையினை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து தை மாதம் 05ஆம் திகதி வரை அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் தமது செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த அறிவித்தலை மீறியும் பெற்றோரது கோரிக்கைகளை உதாசீனம் செய்து மாணவர்களின் நலனை கவனத்தில் கொள்ளாது கல்வி நடவடிக்கைகளைத் தொடரும் உரிமையாளர்களுக்கு எதிராக
மாநகர சபையின் கட்டளைச் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதோடு நாளை முதல் இதனை கண்காணிப்பதற்கு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் பெற்றோர்களும் ஒத்துளைப்பு வழங்குவதோடு தமது பிள்ளைகளின் நலன் தொடர்பில் கூடிய அக்கறை கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.