தனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண

கடந்த ஆட்சியின்போது தனித்துச் செயற்பட்ட புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்துவது அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்காக புலனாய்வுப் பிரிவினருக்கு புத்துயுர் கொடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இது இடம்பெறுவதாக அவர் கூறினார். தீவிரவாதத்தையும் போதைப் பொருள் கடத்தற்காரர்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் விசேட அதிரடிப்படையினர் பங்களிப்பு அவசியமாகவுள்ளது என்றும் கமால் குணரத்ன சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட அதிரடிப்படையினர் வழங்கிய பங்களிப்பை பாராட்டியுள்ள அவர், நாட்டைப் பாதுகாக்கும் முயற்சிகளின் விசேட அதிரடிப்படையினர் தங்களின் தொழில்சார் திறமையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளுக்கு மாத்திரமல்லாமல் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிராகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரின் தேவை அதிகமாகயிருக்கும் என்றும் கமால் குணரத்ன குறிப்பிட்டார்.