தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 48பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் தொடர்ந்தும் வைத்தியசாலைக்கு மேலும் சிலர் அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையியே, இவ்வாறு வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,“அபாயகரமான நோய் தாக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை.  அவர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றது. இன்று மாலை  அவர்கள் வைத்திய சாலையிலிருந்து வெளியேறுவார்கள்” என்று கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு சரவணபவன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.