தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை – அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 கோடியே 40 இலட்சம் பேருக்கு (46 சதவிகிதம்)  கொரோனா தடுப்பூசியின் முதல் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 இலட்சம் பேருக்கு கொரோனா 2ஆவது  தடுபூசியும் செலுத்தப்பட்டு விட்டது.

இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா இரண்டு தடுப்பூசிகளையும்    செலுத்திக் கொண்டவர்கள் பெரும்பாலான பொது இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

இந்நிலையில், `இது அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு தினம்` என அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், தடுப்பூசி போடுங்கள் அல்லது முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கூட்டமாக இருக்கும் பேருந்துகள், விமானங்கள் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.