Tamil News
Home செய்திகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் படகுகளை அழிக்க நீதிமன்றம் அனுமதி

தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் படகுகளை அழிக்க நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள 121  இந்திய மீன்பிடி றோளர்  படகுகளை அழிப்பதற்கு  நீதிமன்றங்கள்  அனுமதி வழங்கியுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் மன்னார் மாவட்ட எல்லை மற்றும் ஊர்காவற்றுறை எல்லைப் பரப்பிற்குள்  ஊடுருவிய சமயம் கடற்படையினரால், கைது செய்யப்பட்டு மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 94 படகுகளும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட  27 படகுகளுமே  இவ்வாறு அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியினை இரு  நீதிமன்றங்களும்  வழங்கியுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் ஊடுருவிய 37 படகுகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின் பெயரில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றினை விடுவிக்க 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதிக்கு அமைய இந்தியாவில் இருந்து வருகை தந்த மீனவ அமைப்புக்கள் 10 படகுகளை மட்டுமே எடுத்துச் சென்றபோதும் எஞ்சியவை அதிக பழுது எனத் தெரிவித்து கை விட்டுச் சென்றனர். இதேபோன்றே ஊர்காவற்றுறை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் 2018ஆம் ஆண்டுவரை தடுத்து வைக்கப்பட்ட படகுகளில் கைவிடப்பட்ட 94 படகுகளிற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைவிட்ட படகுகள் கடற்கரையில் நீண்டகாலமாக நின்று பல பாதிப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பில் நீதிமன்றங்களின்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையிலேயே  குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version