ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடலாம் – எஃப்.பி.ஐ எச்சரிக்கை

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதை எதிர்த்து, ஆயுதமேந்திய போராட்டங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் புலனாய்வு முகமையான எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.

இந்த போராட்டங்கள் பதவி ஏற்பு விழா நடக்கவுள்ள ஜனவரி 20-ம் திகதி, வாஷிங்டன் டி சி உட்பட அமெரிக்காவின் 50 மாகாண சபைகளிலும்  நடக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எனவே அதிபர் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டம் எதிர்வரும் ஜனவரி 17-ம் திகதி தொடங்கி, ஜனவரி 20-ம் திகதி தலைநகர் வாஷிங்டன் டி.சி-யை நோக்கி பயணப்பட இருப்பதாக, டிரம்புக்கு ஆதரவான மற்றும் வலதுசாரியினரின் வலைதளப் பதிவுகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 16 முதல் 20-ம் திகதி வரை எல்லா மாகாண தலைமையகங்களிலும் போராட்டங்கள் நடக்கலாம் என எஃப்.பி.ஐ எச்சரித்திருப்பதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6-ம் திகதி, அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் ஜோ பைடனின் வெற்றியை அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்து சான்றளிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

இதை எதிர்க்கும் விதத்தில் அமெரிக்காவின் மக்களவைக் கட்டடமான கேப்பிட்டல், டிரம்பின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. இதில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.