ட்ராலி டைம்ஸ் என்ற பெயரில் வாரம் இரு முறை வரும் பத்திரிகை ஒன்றை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்ய கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமது உரிமைகளை பேசும் வகையில் விவசாயிகளால் பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதில் காட்டூன்கள், கவிதைகள், புகைப்படங்கள், செய்தி அறிக்கைகள், விவசாய சங்கத் தலைவர்கள் எழுதும் தலையங்கங்கள் கோன்றவை இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக 2000 பிரதிகள் அடிக்கப்பட்டுள்ள ட்ராலி மைம்ஸ் பத்திரிகையில், மொத்தமுள்ள நான்கு பக்கங்களில், ஒரு பக்கம் இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்திரிகையை சுர்மீத் மாவி என்ற திரைக்கதை எழுத்தாளர், ஆவணப்பட மற்றும் புகைப்படக் கலைஞர் குர்தீப் சிங் தலிவாலுடன் இணைந்து தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில்,“லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. லடாக் உட்பட சவாலான பல்வேறு எல்லைப் பகுதிகளில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு இரயில்களில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அந்த இரயில்களை மறிப்பவர்கள் விவசாயிகள் கிடையாது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க சுயசார்பு இந்தியா திட்டத்தை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்று சில விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இது வேதனை அளிக்கின்றது” என்று கூறப்பட்டுள்ளது.