டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐந்து இலங்கையர்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலை

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில், டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மேலும் ஐவரை தடுத்து வைத்து விசாரிக்க சி.ஐ.டி. அனுமதி பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ள ஐவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்து பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று அவர்களை கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து அவ்வுத்தரவுக்கு அமைய தடுப்புக் காவலின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறித்த ஐவரும், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, டுபாயில் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே அவர்கள் நாடு கடத்தப்ப்ட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் கூறினர்.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளில் இருந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் 8 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் சிலர் நாடு கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 65 பயங்கரவாத சந்தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டமை, உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகளின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது