ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திற்கு ஜோ பைடன் எதிர்ப்பு

அமெரிக்காவின் ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய வாக்களிப்புச் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து கருப்பின மக்கள் வாக்களிப்பதை அதிகம் தடுக்கக் கூடியதாக உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சி பெரும்பான்மை உள்ள ஜோர்ஜா மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தல் நம்பிக்கை சட்டம் 2021 (The Election Integrity Act of 2021) நிறைவேற்றப்பட்டது. 2020ம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தபால் வாக்குகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் இரண்டாவது மாநிலமாகியுள்ளது ஜோர்ஜா.

புதிய சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்:

1 தபால் வாக்குச் சீட்டு பெறுவதற்கு தற்போது கையெழுத்துப் போட்டால் போதுமானது. ஆனால், புதிய சட்டப்படி அடையா ஆவணங்களை சமர்ப்பித்தே வாக்குச்சீட்டு பெற முடியும்.

2 வாக்களிப்பதற்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு தண்ணீர், உணவு விநியோகம் செய்வதை எல்லா வாக்குச்சாவடிகளிலும் தடை செய்வது.

3-பிரச்சனை ஏற்பட்டால், வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம்.

4-தபால் வாக்குகளை செலுத்துவதற்கான பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது. (இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்படும்).

5-போதிய வாக்கு வித்தியாசம் இல்லாதபோது நடத்தப்படும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்கூட்டியே வாக்கு செலுத்துவதற்கான கால அளவை குறைப்பது போன்றவை புதிய சட்டத்தின் சில அம்சங்கள்.

இந்நிலையில், இந்த புதிய சட்டம் 20-ம் நூற்றாண்டில், அமெரிக்காவின் தென்பகுதியில் நடைமுறையில் இனப் பாகுபாட்டுக் கொள்கைகளை ஒத்திருப்பதாக கூறிய பைடன் இது ‘கொடுமை’ என்றும் தெரிவித்தார்.

 இந்தப் பிரச்னை தொடர்பாக ஜோ பைடன்  ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் “மீண்டும் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி, மீண்டும் மீண்டும் வழக்குத் தொடுத்து கடைசியில் வெளியான முடிவு சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையின் மீதான, பாதுகாப்பான ஜனநாயக நடைமுறை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

ஜோர்ஜியர்களின் வாக்களிக்கும் உரிமையை, தங்கள் கருத்துகளின் வலிமையால் அவர்கள் தங்கள் இயக்கங்களை வெற்றி பெற வைப்பதை கொண்டாடுவதற்குப் பதிலாக அமெரிக்க இயல்புக்கு மாறான ஒரு சட்டத்தை அவசரமாக கொண்டுவந்து மக்களின் வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் வகையில் ஒரு சட்டத்தை குடியரசுக் கட்சியினர் கொண்டுவந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.

இது குறித்து மேலும் கூறிய அவர், பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் குடியரசுக் கட்சியினரால் கொண்டுவரப்படும் இத்தகைய சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்தின் மீதும் நல்ல மனசாட்சியின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த சட்டங்கள் குறித்து நாட்டின் சட்டத்துறை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.