நாடுகடத்தலுக்காக ஈழத்தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போட்ஸ்ஹைம் (Pforzheim) தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த 70 மணித்தியாலங்களாக தமிழ் மக்களும் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்களும் மிக அதிகளவில் திரண்டு திட்டமிடப்பட்ட நாடுகடத்தலைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.
இந்தச் சூழ் நிலையில் தற்போது தடுப்பு முகாம் அமைந்துள்ள இடத்தில் ஜேர்மனி நாட்டுக் காவல் துறையினர் அதிகமாகக் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பகுதிகளாக ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாதவாறு தடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
பன்னிரண்டு ஈழத்தமிழ் அகதிகளை ஏற்றிச்செல்ல வாகனம் ஒன்று தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாகனம் செல்லவிடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து தலைமை தாங்கிவரும் சகோதர இன ஊடகவியலாளர் விராஜ் மென்டிஸ் தானும் கைதுசெய்யப்படலாம் என்று இலக்கு ஊடகத்துக்குத் தற்போது தெரிவத்திருக்கிறார்.