ஜெனீவாவில் இனி இலங்கைக்குப் பிரச்சினை வரப்போவதில்லை – தினேஷ் குணவர்த்தன

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால் இலங்கைக்கு இனி சர்வதேச ரீதியாக எந்தவொருப பிரச்னையும் ஏற்படாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம் பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்:-

“நல்லாட்சி அரசால்தான் நாடு கடந்த காலங்களில் காட்டிக்கொடுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அவர்கள் அன்று இணை அனுசரணை வழங்கினர்.

இது உலகிலேயே எங்கும் நடக்காத ஒரு விடயம். இது இராணுவம் பெற்றுக்கொடுத்த அனைத்து வெற்றிகளையும் காட்டிக்கொடுக்கும் செயல்பாடாகும். எனினும், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகியுள்ளோம். எனவே, இதனால் நாட்டுக்கு எந்தவொரு ஆபத்தும் வராது.

இதனை கடந்த ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த அரசு நாட்டுக்கு செய்த அநியாயத்தை மாற்றியமைக்கும் பொருட்டே, மக்கள் எமது ஆட்சியைக் கொண்டுவந்தனர். நாம் பயங்கரவாதத்தை தோற்கடித்தவுடன், ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலர் இலங்கைக்கு வந்தார்.

ஆனால், நாம் அவருடன் அன்று எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை. மாறாக இணைந்த பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி, ஒருங்கிணைந்த கருத்துக்களை மட்டுமே வெளியிட்டோம். இதனைத் திரிபுபடுத்தி, சொந்த நாட்டுக்கு எதிராகவே கருத்து வெளியிடக்கூடாது.

பாராளுமன்றுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சர்வதேசம் என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்னைக்கு முகம் கொடுக்க வேண்டும்” என்றார்.