Tamil News
Home செய்திகள் ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிற்கும் – செல்வம்

ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிற்கும் – செல்வம்

ஜனாஸா விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிற்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “முஸ்லிம் மக்களின் ஜனாஸா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது. இது நியாயமான கோரிக்கையே. உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை. இந்த நாட்டின் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் அரசு கைவைப்பதை ஏற்கமுடியாது.

இது ஒரு மனித உரிமை மீறல் செயல்பாடு. எனவே, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அவர்களின் நம்பிக்கைப்படி புதைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருக்க கூடாது. தமிழ் பேசும் மக்கள் மீது இந்த அரசு கொடூரமான கரங்களை நீட்டிக்கொண்டு வருகிறது. அதேபோல எமது நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயல்பாட்டை மிக திறமையாக செய்து வருகின்றது.

இந்த விடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயல்படும்போது தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும்” என்றார்.

Exit mobile version