ஜனாஸா எரிப்புக்கு தீர்வில்லையேல் நாடு தழுவிய அமைதிப் போராட்டம் – ரிஷாத் அழைப்பு

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நேற்று கொழும்பு, பொரளை, பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த அரசாங்கங்களோடு ஒப்பிடுகையில், மிகவும் மோசமான ஓர் அரசாக தற்போதைய அரசை நாம் பார்க்கின்றோம். இந்த அரசாங்கம் தன்னை திருத்திக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்களை எமது நாடு எதிர்கொள்ள நேரிடும்.

இன்று ஆரம்பமாகியுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இனமக்களும் ஒன்றிணைந்து ஜனநாயக முறையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர். ஆகையால், இன்றிலிருந்தாவது இதனை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நியமித்திருக்கும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழுவில், இனவாதிகளும் மதவாதிகளும்தான் அதிகமாக இருக்கின்றார்களேயொழிய, தகுதியானவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனவே, ஒரு சமூகத்துக்கு எதிராக இவ்வாறன திட்டமிட்ட செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்குமாக இருந்தால், அதைவிட ஒரு கீழ்த்தரமான அரசாங்கத்தை இந்த நாட்டிலே காண முடியாது.

இதேவேளை, அமெரிக்கா, கனடா, லண்டன், பிரான்ஸ், இத்தாலி, கட்டார் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழும் எமது மக்கள், இந்த மோசமான செயலுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதை நாம் பார்க்கின்றோம். உலக நாடுகளில் வாழும் எமது மக்கள் இவ்வளவு காலமாக இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால், இன்று இந்த ஈனச் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு, இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். எனவே, இந்தச் செயலை இன்றோடு நிறுத்துங்கள்.”